Qrius Learning Initiatives

Qrius Learning Initiatives

Share

01/03/2026

விளையாட்டாகப் பேசுவதை சொத்து இப்போது விரும்புவதில்லை. "போட்டு வாங்குவதை" அவரால் இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. உறவினர்களுக்கு வேறு பல தகவல்கள் தெரிந்துகொள்ள விருப்பம் இருக்கும். அதைச் சுற்றி வளைத்துக் கேள்வி கேட்டு மடக்கலாம் என்ற அவர்களின் எண்ணத்தைச் சட்டெனப் புரிந்துகொள்கிறார்.
"நேத்தைக்கு எங்கே போனீங்க...?"
"எத்தனை எடத்துக்குப் போறோம். அதையெல்லாம் ஞாபகம் வச்சு சொல்ல முடியுமா...?"
"பள்ளிக்கூடம் எல்லாம் எப்படிப் போகுது?"
"பள்ளிக்கூடம் எப்படிப் போகும்... எப்பவும் போலப் போகும்"
பள்ளிக்கூடத்தில் உனக்கு யார் யார் பிரண்ட்ஸ்?"
"அவங்கள உங்களுக்குத் தெரியாதே... அப்ப சொன்ன புரியுமா?"
போன்ற பதில்களைக் கூறுகிறார்.
மட்டுமல்ல நாம் ஏதாவது கூறும்போது அச்செய்திக்கான ஆதாரங்கள் தேடுகிறார். "சரி நான் போய்ட்டு வர்றேன்" என்று அப்பா கூறினால் "ஆப்பீஸுக்குப் போகலையா? பையைக் காணோம்" என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்.
அவர் அப்பா சிரித்துக்கொண்டே "நான் திருச்சூரில் தங்காமல் இன்று மாலையே திரும்பி வந்திருவேன்".
"ஓ...ப்ராப்ர்டி விசிட்டா...?"
இது இப்படியிருக்க
கடந்த ஆறேழு மாதங்களாக ஸ்பைடர் மேன் பைத்தியமாக மாறியிருந்தார். விடுமுறை நாட்களில் காலை முதல் மாலை வரை தொலைக்காட்சியில் ஸ்பைடர் மேன்தான். பள்ளி விட்டு வந்தால் உறங்கச் செல்லும்வரை தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்தான். எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் தெரியும்.
வேண்டாம் என்று சொன்னால் கேட்கமாட்டார்...
சலிப்படையட்டும் விட்டுவிடுவோம் என்று ஒரு சில வாரங்கள் விட்டாலும் அவர் அதைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும்போது சற்று கவலையாக இருக்கும்.
இவரை எப்படியாவது, பத்து நிமிடமாவது நாம் சொல்வதைக் கேட்க வைக்க வேண்டும் என்று நான் சொல்ல உங்களால் முடியாது என்று மனைவி சொல்ல ஈகோ சடைகுடைந்தெழ... மனம் திட்டத் தீட்டத் தொடங்கியது.
கவனத்தைக் கவரும் முதல் வாக்கி்யம் என்ற உத்தியை விட்டுப் பார்த்தேன்.
"காலையில் அந்தச் செடியிலுள்ள மொட்டைப் பார்த்தேன். என்ன அழகு தெரியுமா...? சூரியன் வந்தால் விரியத் தொடங்கும். பூ மலர்வதைப் பார்க்கலாம் வா..."
ம்ஹூம்...
செய்தித்தாள் வந்ததும் அதை விரித்து வைத்து "மோளூ இங்கே பாரு.. (மனைவியை மோளூ என்றுதான் அழைப்பேன்) அந்த யானை ரோட்டுக்கு நடுவே நிற்கிறது... நெற்றிப்பட்டம் கட்டிய பதினெட்டு யானைகளைப் பார்..."
ம்ஹூம்... தலையைக் கூடத் திருப்பவில்லை.
மனைவியின் சிரிப்புச் சத்தம் சற்று உரக்கக் கேடகத் தொடங்கியது.
அப்படி இருக்கும்போதுதான் என் நண்பன் ஒரு ரீல்ஸ் ஒன்றைப் பகிர்ந்திருந்தான். மாத்ரூபூமி புக்ஸ் தங்கள் புத்தகக் கடையில் நடத்தும் "ஒரு கதையுண்டு" (ஒரு கதை இருக்கிறது.) என்ற நிகழ்ச்சி.
சாதாரணமாக இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் மாத்ருபூமி புக்ஸ் இந்த முறை குழந்தைகளுக்கான நிகழ்ச்சியாக நடத்தியிருந்தார்கள். திரு கல்பற்ற நாராயணன் அவர்கள் எழுதிய "எந்தா கத" (ஆகா.. என்னா கதை!!!) என்ற புத்தக அறிமுகமும் அதிலுள்ள இரண்டு கதைகளைக் கூறும் நிகழ்ச்சி. எழுத்தாளரும் பங்கெடுக்கிறார். அதனால்தான் நண்பன் அதை எனக்கு அனுப்பினான்.
முதல் கதையைக் கேட்டேன். உடனே நிறுத்திக்கொண்டேன். சொத்துடன் சேர்ந்து இந்தக் கதையைக் கேட்டால் எப்படி இருக்கும் என்ற எண்ணம்தான் காரணம். எனக்கும் கதையைக் கேட்க வேண்டும் என்ற அடங்காத ஆசை இருந்தும் நான் அடக்கிக்கொண்டேன்.
இனி இதை சொத்துவிடம் கூறி அவரை இழுத்து இதற்குள் மூழ்கச் செய்ய வேண்டும். அதில்தான் வெற்றி. என்ன செய்வது?
நேற்று எர்ணாகுளத்திற்குப் போய்க்கொண்டிருந்தோம் அவர் பின்னிருக்கையிலிருந்து எதையோ வரையவோ எழுதவோ செய்துகொண்டிருந்தார். நானும் மனைவியும் முன்னாலிருந்து பேசிக்கொண்டிருந்தோம்.
நான் சட்டென "நேற்றைக்கு ஒரு ரீல்ஸ் பார்த்தேன். – எந்தா கதை என்பதுதான் நிகழ்ச்சியின் பெயர். குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கெடுத்திருந்தார்கள்" என்று மட்டும் கூறிவிட்டு வேறு பேச்சுக்குத் தாவினேன்.
மனைவி புரிந்துகொண்டார். வேறு பேச்சில் மூழ்க உதவினார்.
இரண்டு மணி நேரம் கடந்திருக்கும். நான் மீண்டும் "எந்தா கத நிகழ்ச்சியில் முதல் கதையைக் கேட்டேன். அதுவும் பாதிதான் கேட்டேன். பூரண கர்பிணியான அந்தத் தாய்ப்புலிக்கு என்னாச்சு என்று தெரியவில்லை அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று மட்டும் சொல்லிவிட்டு வேறு பேச்சுக்குத் தாவினோம்.
இன்று அந்த அதிசயம் நடந்தது.
சொத்தின் அம்மா தொலைக்காட்சி பார்ப்பதைக் கொஞ்சம் அதட்டினார். சாதாரணமாக அதட்டினால் கண்டுகொள்ள மாட்டார். அவர் பாட்டுக்குத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார். ஆனால் இன்று அதை விட்டுவிட்டு என் அறைக்கு வந்தார். "அந்தத் தாய்ப்புலிக்கு என்னாச்சு என்று பார்க்கலாமா" என்று கேட்டு அந்த ரீல்ஸைப் பார்த்தோம்.
பார்த்தது மட்டுமல்ல – இரண்டு கதைகளையும் கேட்டோம். சிரித்தோம். என் சிரிப்பு உண்மையான சிரிப்பாக இருந்தது. முன்னரே நான் அந்தக் கதையைப் பார்த்திருந்தேன் என்றால் அந்த உண்மைத்தன்மை இருந்திருக்காது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மட்டுமல்ல அந்தக் கதையைப் பற்றி நான் கூறும் கருத்து வாக்கியங்கள் நேர்மையானவையாக இருக்கும். சொத்திற்காகச் சொன்னதாக இருக்கா.
அவருக்காக இதைச் செய்கிறோம். மறைமுகமாக வேலை வாங்குகிறோம் என்றெல்லாம் புரிந்துகொண்டால் அதிலிருந்து விலகிப் போகிறார். அது நாம் கொடுக்கும் ஒரு வேலையாக மாறுகிறது. கொஞ்சம் கட்டாயப்படுத்தி்னால் கடனே என்று செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்.
இப்படிப்பட்ட குழந்தையிடம் அடுத்த ஆண்டு முதல் "இதுதான் க, இதுதான் கா... வீட்டிலிருந்து எழுதி வரணும். படித்துக் காட்டணும்" என்று சொல்லப்போகிறார்கள் ஆசிரியர்கள்.
இந்தக் கதை கேட்ட நிகழ்வில் ஒரு லாபம் இருக்கிறது. அடுத்தமுறை நான் இத்தனைச் சிரமப்படாமல் "எந்தா கதையின் அடுத்த ரீல்ஸ்" வந்திருக்கிறது என்று மட்டும் சொன்னால் போதும். அதே நேரத்தில் க, கா வுக்கு ஆசிரியர்கள் ஒவ்வொருமுறையும் குழந்தைக்குக் கொடுக்கும் அழுத்தத்தின் அளவை இருமடங்காகக் கூட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

Want your school to be the top-listed School/college in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


14/34, Selvalakshmi Garden, Subramaniyam Palayam G. N Mill Post
Coimbatore
641029