Thevar cabs
06/09/2016
அதிகம் அறியப்படாத பரளிக்காடு
கோவை: கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து கிளை பிரியும் தோலாம்பாளையம் சாலையில் சென்றால் சுமார் 30 கிலோமீட்டர் பசுஞ்சாலைப் பயணத்திற்குப் பின் பில்லூர் அணைக்கட்டைச் சென்றடையலாம். முன் பதிவு குறுகலான மலைப்பாதையில் பயணித்தால் அணைக்கட்டை ஒட்டி இருக்கும் பரளிக்காடு எனும் மலையோர கிராமத்தை சென்றடையலாம். இங்கு வாழும் பழங்குடியினர் நலனுக்காக வனத்துறையே வடிவமைத்தது தான் பரளிக்காடு பசுமைச் சுற்றுலா. இங்கு செல்ல வனத்துறை அலுவலரிடம் தொலைபேசியில் முன் பதிவு செய்ய வேண்டும். விடுமுறை தினங்கள் என்றால் கூட்டம் அதிகம் இருப்பதால் எண்ணிக்கையைப் பற்றி கவலை இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். வார நாட்களெனில் குறைந்தது 40 நபர்கள் கொண்ட குழுவாக இருந்தால் மட்டுமே முன் பதிவு செய்வார்கள். பெரியவருக்கு ரூ.300 குழந்தைகளுக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பரிசல் பயணம் ஆற்றங்கரையோர ஆலமரங்களில் நீண்ட ஊஞ்சல்கள் கட்டப்பட்டுள்ளன. குளிர் தருக்களின் கீழ் கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. சிறார்கள் ஊஞ்சலாடி மகிழ்கிறார்கள். காதலர்களும், தம்பதியர்களும் இதமான சூழலை அனுபவித்த வண்ணம் கயிற்றுக் கட்டில்களில் அமர்ந்து பேசிக் களிக்கிறார்கள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பரிசல்கள் வந்து சேர்கின்றன. வழிகாட்டி அனைவரையும் உற்சாகமாக கூவி அழைத்து அனைவருக்கும் 'லைஃப் ஜாக்கெட்டுகளை" அணிவிக்கிறார். சிந்தெடிக் பைபர்களினால் ஆன அகன்ற வட்டுக்களில் பயணம் தொடர்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் மட்டும் தண்ணீரன்றி வேறில்லை. பரிசலோட்டி அணைக்கட்டின் வரலாற்றையும், ஆற்று மீன்களின் சுவையையும், மிருகங்கள் தண்ணீர் அருந்தவருவதையும் சொல்லிக்கொண்டே துடுப்பை போடுகிறார். என்னதான் நட்டாற்றில் பயணித்தாலும் வெயில் மண்டையைப் பிளக்கத்தான் செய்கிறது. சுற்றிலும் உயரம் குறைவான மலைகள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். கிராமத்து உணவுகள் பரிசல் மறுகரையை அடைந்ததும் பயணிகளின் ஆட்டமும் பாட்டமும் ஆரம்பமாகிறது. கொஞ்சம் பெரியவர்கள் வழிகாட்டியின் உதவியோடு குறுக்கும் நெடுக்குமாய் விழுந்து கிடக்கும் மரங்களில் ஏறி இறங்கி வனத்திற்குள் நுழைகிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் மதிய உணவு தயார் என்ற அறிவிப்பு வருகிறது. மீண்டும் பரிசல் ஏறி மறுகரைக்குச் சென்றால் மலைவாழ் மக்களே தயாரித்த சுவையான உணவு வகைகள் காத்திருக்கின்றன. பஃபே சிஸ்டம். நகர்ப்புறத்துக்காரர்களுக்கு கிராமத்து உணவுகளில் பிரியம் இருக்காது என்பதால் மெனுவில் வெஜ் பிரியாணி, சப்பாத்தி, தயிர்சாதம் என சமதர்மம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய மெனுவில் இருந்த கேப்பை களி உருண்டையும், அதற்குத் தொட்டுக்கொள்ள கொடுத்த கீரை கடைசலும் 'கொண்டா கொண்டா" என்றிருந்தது. டிரெக்கிங் சிறிய இளைப்பாறலுக்குப் பின் தொடங்குகிறது டிரெக்கிங். வனத்துறை வழிகாட்டி உதவியுடன் காட்டிற்குள் நடக்கத் துவங்குகிறோம். பரளிக்காடு வனம் அடர் வனம் அல்ல. இலகுவானது. பிரம்மாண்டமான மரங்களோ, முட்புதர்களோ, காட்டுக்கொடிகளோ வழிமறிக்காததால் நடை எளிமையாக இருந்தது. சாகச மனங்களுக்கு சற்று ஏமாற்றம்தான் என்றபோதும் குழந்தை குட்டிகளோடுச் செல்ல மிகவும் ஏற்ற சிக்கல்களில்லாத காட்டுப்பயணம். ஆற்றில் குளியல் பிரயாணத்தின் இறுதிப் பகுதி அத்திக்கடவு ஆற்றில் ஆனந்தக் குளியல். காவியைக் கரைத்த மாதிரி செம்மண் நிறத்தில் கரைபுரண்டு வருகிறது ஆறு. காலம் தப்பி வந்த திடீர் மழையால் ஆற்றில் நல்ல வெள்ளம். படுகை முழுக்க யானை முதுகு போன்ற பிரம்மாண்டமான பாறைகள். நூற்றாண்டு உருளலில் கற்கள் அனைத்தும் தனக்கான தனிப்பொலிவை அடைந்திருக்கின்றன. வீட்டுப்பெண்கள் உருளைக்கற்களை ஆசையோடு சேகரித்துக்கொள்கின்றனர். கிழங்கு மஞ்சள் அரைக்க, பூண்டு நசுக்க, பனங்கற்கண்டு நுணுக்க அருமையான உபகரணம். ஆற்றின் கரையோரத்தில் உயரம் உயரமான மாமரங்கள் தலைகொள்ளாத மாங்காய்களுடன் காய்த்து நிற்கின்றன. மழைச்சகதியில் விழுந்து கிடக்கும் மாம்பிஞ்சுகளைப் பொறுக்கியெடுத்து ஆற்றில் கழுவி உப்புச் சேர்த்து திங்க சுவை அபாரம். நீந்திக் குளிக்க முடிகிற அளவிற்கு ஆழமில்லாத ஆறு. பாறைகள் வேறு அதிகம். ஒரு குத்துப்பாறையினைப் பிடித்துக்கொண்டு உடலை நீட்டிக்கொண்டால் நம்மைக் கழுவிக் கரைக்கும் ஆவேசத்துடன் தழுவிக்கொள்கிறது ஆறு. இறங்கிய ஜனங்களெல்லாம் பாறைகளோடு பாறையாக ஊறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். கரையேற எவருக்கும் மனமில்லை. மாலைச் சூரியன் மெள்ள மேற்கில் சரிய வழிகாட்டி குரலெழுப்புகிறார். பெண்கள் உடைமாற்ற வசதி இல்லாதது பெரிய குறை. பெரிய மரங்களைத் தேடி ஈர ஆடைகளோடு அலைகிறார்கள். என்னதான் இயற்கையோடு இணைந்த இடம் என்ற போதும் பரளிக்காட்டை ஒரு சுற்றுலாத் தலமென அங்கீகரிக்க மனம் ஒப்பவில்லை. குடும்பத்தோடு காலையில் கிளம்பி மாலையில் வீடு திரும்பிவிட முடிகிற ஒரு பிக்னிக் ஸ்பாட்டாகத்தான் கருத முடியும். சீதோஷ்ணம், வன விலங்குகள் இல்லாமை, அடர்த்தி இல்லாத காடு என்பன அக்கருத்தாக்கத்தின் காரணிகள்.
26/06/2013
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில். இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு முன்னணி சிமெண்ட் தொழிற்சாலைகள் இங்குதான் அமைந்துள்ளன.
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கை அரசர்களை வெற்றி கொண்ட சோழபுரம் கங்கை கொண்ட சோழபுரம். வடநாட்டுப் போரில் அடைந்த வெற்றியின் அடையாளம். இங்குள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சோழ அரசர் முதலாம் இராஜேந்திரர். இக்கோயிலில் தஞ்சை பெரிய கோயிலை போன்று பெரிய நந்தி மட்டுமல்லாமல் நாட்டியமாடும் விநாயகர் உட்பட பல அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன. சிங்கத் தலை கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்கள் இந்தக் கோயிலில் உள்ளன. சோழர்களின் பழமையான சாதனைகளில், பிரமாண்டங்களில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தனிப்பெருமை உண்டு.
ஏலாக்குறிச்சி - அடைக்கலமாதா கோயில்
'தேம்பாவணி' எழுதிய வீரமாமுனிவரால் கட்டப்பட்ட தேவாலயம். ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட இந்தக் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார், 1711 இல் ஏலாக்குறிச்சியில் இதை உருவாக்கினார். இங்குள்ள அடைக்கலமாதா சொரூபம் லண்டன் மாநகரில் இருந்து கொண்டு வரப்பட்டது. பெரம்பலூரில் இருந்து 65 கி.மீ. திருச்சியில் இருந்து 80 கி.மீ. சென்னையில் இருந்து 375 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஏலாக்குறிச்சி. கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்தத் தெய்வீக சிறப்பு பெற்ற தேவாலயத்தைச் சுற்றுலாத் தலமாக அறிவித்தது. இந்த மாதா கோயிலுக்கு சோழ மன்னன் நிலக்கொடை அளித்ததை அறிவிக்கும் கல்வெட்டு சாசனம் ஏலாக்குறிச்சியின் மற்றுமொரு சிறப்பு. தொலைபேசி - 621715.
ஜெயங்கொண்டம்
நெல்லிமண கிராமம் என்றால் யாருக்கும் புரியாது. ஜெயங்கொண்டம் என்றால் புரிந்துவிடும். இவ்வூரின் இயற்பெயர் இதுதான். இங்குள்ள சிவன் கோயிலின் ஸ்தல விருட்சம் நெல்லிமரம் என்பதால் ஊர்ப் பெயரில் நெல்லியும் சேர்ந்து கொண்டது. தனது தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றுவதற்கு முன்னால் இராஜேந்திர சோழன் ஜெயங்கொண்டம் என்ற பெயரை இந்த ஊருக்கு வைத்தான். கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் ஜெயங்கொண்டம் எல்லோரும் கண்டிப்பாக போய்ப் பார்க்க வேண்டிய சோழர் காலக் கலை நகரம்.
மாளிகை மேடு
இந்த மாளிகை மேடு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ளது. தொல்லியம் துறையின் அகழ்வாய்வுகள் முதலாம் இராஜேந்திர சோழனின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் தொல்லியல் துறை இந்த இடத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மாமன்னர்கள் கால்பதித்த மாளிகை மேட்டிலும் நம் கால் பதிய வேண்டாமா?
காரைவெட்டி பறவைகள் சரணாலயம்
பறவைகள் எங்கிருந்தால் என்ன? பார்க்கப் பார்க்க அழகுதான். தஞ்சாவூருக்கு வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ளது காரைவெட்டி பறவைகள் சரணாலயம். இதன் மொத்தப் பரப்பு 454 ஹெக்டர். காலிமர் பறவைகள் சரணாலயத்துக்கு அடுத்து இந்தச் சரணாலயம்தான் பெரும்பாலான நீர்ப்பறவைகளைக் கவரக் கூடியது என்ற புகழுக்குரியது. ஒவ்வொரு நவம்பர் மாதமும் பறவைகள் இங்கு வருகை தரும். அந்தக் காலங்களில் பறவைகள் நீரில் வண்ண ஓவியங்களாகத் தெரியும். நீர்வண்ண ஓவியங்கள்!
திருமானூர்
திருமான் ஊர் திருமானூர். ஒரு கலைமானுடன் நடராசர் நாட்டியம் ஆடியதாக உள்ளூரில் புராணக் கதை ஒன்றுள்ளது. அதனால் இந்தப் பெயர் வந்ததாக வரலாறு. இராஜராஜ சோழன் பெரம்பலூரிலிருந்து தஞ்சைக்குச் செல்லும் வழியில் 20 அடி உயரம் உள்ள ஒரு சிலையைவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. வருடத்தில் சில நாட்கள் சூரியக் கதிர்கள் கோயிலின் கர்ப்பக் கிரகத்தின் உள்ளே விழும். சோழர்கால வரலாற்றின் காலச் சுவடுகள் பதிந்த ஊர் இது. ஒருமுறை பார்த்தால்தான் என்ன குறைந்துவிடப் போகிறது.
திருமழப்பாடி
ஊருக்கொரு புராணக் கதையோ, வாய்மொழிக் கதையோ இருக்கிறது. அப்படியொரு கதை இந்த ஊருக்கும் உண்டு. இங்கு பிரபலமான புராணக்கதை ஒன்று உலவுகிறது. தாளவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் மார்க்கண்டேய முனிவருக்காக மற்றோரு பிரபஞ்ச நடனத்தை வைகாசி மாதம் பௌர்ணமி அன்று அருளுவதாக நடராசர் வாக்கு தந்தாராம். ஏனெனில் சிதம்பரத்தில் நடராசர் ஆடிய ஆதி தாண்டவத்தை காணமுடியவில்லையாம். எனவே இந்த ஊர் திரு-மழ-பாடி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் திருக்குளத்தில் குளித்தால் தொழுநோய் தீரும். பிள்ளை பாக்கியம் கிட்டும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
காமரசவல்லி
தஞ்சை மாவட்டத்தைப் போலவே சோழர் காலத்து பிரமாண்ட எழில் நிறைந்த கோயில்களைக் கொண்டுள்ளது அரியலூர் . இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த ஏராளமான ஆதாரங்கள் இந்தக் கோயிலில் கண்டெடுக்கப்பட்டன. இங்கு அப்பர் சுவாமிகள் மேளத்துடன் சாக்கைய கூத்து ஆடிய நிலையில் காணப்படுகிறார்.
கள்ளன் குறிச்சி கோயில்
இவ்வூர் ஒரு சிறு கிராமம். ஆனால் பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் பரிச்சயமான கிராமம். இங்குதான் கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. அரியலூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கள்ளன் குறிச்சி உள்ளது.
மேலப்பழுவூர்
தமிழ்த் துறவிகளின் சரணாலயமாகத் திகழ்ந்துள்ள ஊர் இது. அரியலூர் - திருச்சி சாலையில் அமைந்திருக்கிறது. மேலப்பழுவூருக்கு வரலாற்றில் முக்கிய இடமுண்டு. இந்தப் பகுதியில் தலைவராக ஆட்சி புரிந்துள்ள பழுவேட்டரையரின் தலைமையகமாக விளங்கியுள்ளது. இங்குள்ள குடைவரைக் கோயிலான விஷ்ணு கோயில் மனத்தைக் கவரக் கூடியது. இக்கோயிலில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளியன்று பூஜைகள் நடக்கும்.
26/06/2013
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
No;1789 Venkatalaxmi Complex, Trichy Main Road, Ramanathapuram
Coimbatore
641045
Opening Hours
| Monday | 9am - 9pm |
| Tuesday | 9am - 9pm |
| Wednesday | 9am - 9pm |
| Thursday | 9am - 9pm |
| Friday | 9am - 9pm |
| Saturday | 9am - 9pm |
| Sunday | 11am - 1pm |