AIYF - THENI

AIYF - THENI

Share

03/01/2026

வேலைவாய்ப்பிற்கான போராட்டம்.

வேலைவாய்ப்பை விழுங்கும் மோடி அரசு. தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம்.

"ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு" என்ற வாக்குறுதி, 11 ஆண்டுகால மோடி ஆட்சியில் வெறும் 'தேர்தல் கால ஜும்லா' என்ற பொய் வாக்குறுதி என்பது நிரூபணமாகியுள்ளது. இந்தியாவின் இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை வேலையில்லாத் திண்டாட்டத்தில் தள்ளி, வன்முறை அரசியலுக்குள் இழுக்கும் ஒரு அபாயகரமான சூழலை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது.

ஒன்றிய அரசு பணியிடங்கள் திட்டமிட்டு சுருக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணியாளர் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2014-ல் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது சுமார் 40.35 லட்சம் ஆக இருந்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், தற்போது 30.55 லட்சம் ஆக சரிந்து 10 லட்சம் வேலைகளாக சுருங்கி மறைந்து காணாமல் போயுள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்பாமல், அந்தப் பணியிடங்களையே ரத்து செய்யும் நுட்பமான 'வேலை ஒழிப்பு' முறையை அரசு கையாள்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே, வங்கி, LIC, BSNL ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பணியிடங்கள் கடந்த 11ஆண்டுகளில் பறிக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி நடவடிக்கையால் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு தான் பேரிழப்பாகும்.

100 நாள் வேலைத்திட்டத்தை முடக்கும் 'விக்ஷித் பாரத்' மசோதா - 2025

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை (MGNREGA) சீர்குலைக்க, 2025-ல் ஒன்றிய அரசு ‘விக்ஷித் பாரத் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்)’ மசோதாவை இரவோடு இரவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அவசரகதியில் சட்டமாக்கியுள்ளது. இதன் மூலம் இதுவரை ஒன்றிய அரசு பெரும் பங்கை ஏற்றிருந்த நிலையில், இனி மாநிலங்கள் 40% செலவுகளை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நிதிச்சுமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாஜக அல்லாத தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு 40% நிதிச்சுமை, ஆனால் சில வடமாநிலங்களுக்கு வெறும் 10% மட்டுமே. இது தமிழகத்தின் கிராமப்புற பொருளாதாரத்தைச் சிதைக்கும் செயலாகும்.

வேலை என்பது ஒரு "சட்டப்பூர்வ உரிமை" என்ற நிலையை மாற்றி, அரசு ஒதுக்கும் நிதிக்கு உட்பட்டு மட்டுமே வேலை வழங்கப்படும் என்ற நிலைக்கு இளைஞர்களைத் தள்ளுகிறது இந்த மசோதா. பட்ஜெட் கட்டுப்பாடு மூலம் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்திற்கு பெரிய வேலை இழப்பை உண்டாக்கும் நடவடிக்கையாகும்.

முதலாளிகளின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றி இந்திய தொழிலாளர் வர்க்கத்தினை அடிமையாக்கும் செயலை அரங்கேற்றம் செய்து வருகின்றனர் பாசிச ஆட்சியாளர்கள். ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் Labour Codes, இளைஞர்களின் வேலைப் பாதுகாப்பைப் பறிக்கின்றன.

நிலையான கால வேலைவாய்ப்பு Fixed-term employment என்ற பெயரில் நிரந்தரப் பணிகளை ஒழித்துவிட்டு, எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டுத் தூக்கக்கூடிய அபாயத்தை ஒப்பந்த முறை Outsourcing உருவாக்கியுள்ளது.

புதிய சட்டங்கள் வேலை நேரத்தை அதிகரிக்கும் நோக்கில் 8 மணி நேர வேலைக்கு வேட்டு வைத்து 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்கின்றன, இது இளைஞர்களின் உடல் மற்றும் மன நலத்தைப் பாதிப்பதோடு, கூடுதல் ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதையும் தடுக்கிறது.

2024-25 நிதியாண்டின் தரவுகளின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக, படித்த இளைஞர்களிடையே இது 14.6% முதல் 15% வரை நீடிக்கிறது.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்க கேட்டால் கைகளில் மதவெறி ஆயுதங்களைக் கொடுக்கும் வேலையை பாஜக அரசு செய்கிறது. தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றுவது, மதக் கலவரங்களைத் தூண்டுவது என இளைஞர்களைச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வைத்து, அவர்களின் எதிர்காலத்தைச் சங்கப்பரிவார அமைப்புகளுக்கு அடிமையாக்குகிறது. இதன் மூலம் இளைஞர்களை திசை திருப்பும் அரசியல் நேரடியாக அரங்கேற்றம் செய்யப்படுகிறது.

எனவே நமது போர்க்குணமிக்க கோரிக்கைகள்
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய, மாவீரன் பகத்சிங்கின் பெயரில் BNEGA - Bhagat Singh National Employment Guarantee Act என்ற தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற நமது போராட்டம் தொடர்கிறது.

ஆகவே தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் தமிழகப் பணியிடங்கள் தமிழருக்கே என்ற கோரிக்கை முழக்கத்துடன் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் 100% தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பறிக்கப்பட்ட 1 லட்சம் காலியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பதை நிறுத்தி பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமூக நீதியை நிலைநாட்ட தனியார்துறை நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டு வார வேண்டும்.

மக்களிடையே பிளவை உண்டாக்கி ஆட்சியைத் தக்கவைக்கும் பாஜக அரசு, இளைஞர்களின் உழைப்பைச் சுரண்ட நினைக்கிறது. வேலை என்பது ஒரு தனிமனிதனின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் 'சங்கப்பரிவார' அரசியலை முறியடித்து, வேலைவாய்ப்பை உரிமையாக்க, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, பொதுத்துறையை வலுப்படுத்த, இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க மேலும் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் 2026 ஜனவரி 5ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள இரயில் நிலையங்களை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது.

வேலை என்பது இரக்கம் அல்ல, அது உரிமை. உரிமைக்காக எழும் இளைஞர் சக்தியே சமூக மாற்றத்தின் தொடக்கம். எனவே இளைஞர்களே, அணிதிரண்டு அநீதிக்கு எதிராக ஒன்றிணையுங்கள். ஒன்றிணைந்து போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

இரா.தமிழ் பெருமாள்
திருச்சி - 02.01.2026

Want your organization to be the top-listed Government Service in Theni?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Theni