MPSENDIL ASSOCIATES

MPSENDIL ASSOCIATES

Share

19/03/2024

வழக்குரைஞர்கள் அனைவருக்கும் வணக்கம்
********************

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பத்திரப்பதிவு வழக்கறிஞர்கள் சங்கம் எதற்காக?. என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கான விளக்கம் பின்வருமாறு.

இந்திய முத்திரைச் சட்டம் மற்றும் இந்திய பதிவுச் சட்டம் ஆகிய இரண்டும் ஒன்றிய அரசின் சட்டங்கள்.

தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறை என்பது சட்டம் சார்/பகுதி நீதித்துறை (Quasi Judicial) பணியை மேற்கொள்கிறது.

சட்டம்சார்/பகுதி நீதித்துறை பணிகளை மேற்கொள்ள வழக்கறிஞர்களுக்கு இயல்பாக அதிகாரம் உள்ளது.

இந்திய முத்திரை சட்டம் மற்றும் இந்திய பதிவுச் சட்டம் ஆகிய சட்டங்களும் மற்ற சட்டங்களும் நடைமுறைக்கு வந்தபோது இன்றுள்ள இந்த அளவில்/எண்ணிக்கையில் சட்டக்கல்லூரிகளும் வழக்கறிஞர்களும் இந்தியாவில் இல்லை.

அதனால் அந்தந்த ஊரில் ஓரளவு படித்த விவரம் அறிந்த சிலர் மட்டும் பத்திரம் எழுதி பதிவு செய்து வந்தனர்.

இவர்களை எல்லாம் ஒழுங்கு படுத்த வேண்டும் என்றுதான் தமிழ்நாடு அரசு 1982 ஆம் ஆண்டு இந்திய பதிவுச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் கொண்டு வந்து பிரிவு 89B ஐ சேர்த்தது.
இந்த பிரிவு 89B திருத்தத்தின்படி தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் உரிமவிதிகள் 1982 ஐ கொண்டு வந்தது.

இந்த உரிமவிதிகள் 1982 இலேயே இந்த விதிகள் எதுவும் வழக்கறிஞர்கள் எழுதிப்பதிவு செய்யும் ஆவணங்களுக்குப் பொருந்தாது என்று தெளிவுபடுத்தி உள்ளது.
அதாவது உரிமவிதிகள் 1982 என்பது பத்திரப்பதிவு செய்வதற்கு ஒரு மாற்று ஏற்பாடே தவிர முதன்மையான ஏற்பாடு அல்ல.

அதாவது, பத்திரப்பதிவில் வழக்கறிஞர்களின் முதன்மையை உரிமவிதிகள் 1982 இலேயே ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது.

இருந்தும் பத்தாவது மட்டுமே அடிப்படை கல்வித்தகுதி இருந்தால் போதும் உரிமவிதிகள் 1982 இன்படி பத்திர எழுத்தர் ஆகலாம் என்றுள்ள பத்திர எழுத்தருக்கு சார் பதிவாளர் அலுவலகங்களில் கிடைக்கும் மரியாதையை சார் பதிவாளர் உள்ளிட்ட பதிவாளர் அலுவலக ஊழியர்கள் எவரும் வழக்கறிஞர்கள் எவருக்கும் தருவதில்லை. மாறாக நாள்தோறும ஆவமதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இத்தனைக்கும் சார் பதிவாளர் அலுவலகம் ஒரு சட்டம்சார்/பகுதி நீதித்துறை அலுவலகம் ஆக இருந்தும் பத்திரப்பதிவுக்கு செல்லும் வழக்குரைஞர்கள் ஒவ்வொரு நாளும் புறக்கணிப்பிற்கும் அவமதிப்பிற்கும் ஆளாகிறார்கள்.
வழக்கறிஞர்களாகிய நமக்கு ஏன் இந்தநிலை என்று சிந்தித்தால் தமிழ்நாடு பதிவுத்துறைக்கும் சார் பதிவாளர் அலுவலர்களுக்கும் அவர்கள் செய்யும் பத்திரப்பதிவுப் பணிகள் யாவும் சட்டம்சார்/பகுதி நீதித்துறை (Quasi Judicial) பணிகள் என்பதை வழக்குரைஞர்கள் ஆகிய நாம் அவர்களுக்கு எடுத்து சொல்லாமல் விட்டுவிட்டோம்.

மேலும் உரிமவிதிகள் 1982 இன்படி உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்கள் பத்திரப்பதிவுத் துறையினால் உரிமம் வழங்கப்பட்டவர் என்பதால் உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்கள் இயல்பாக பத்திரப்பதிவுத் துறையின் செல்லப் பிள்ளைகள் ஆகிறார்கள்.

வழக்குரைஞர்களை பத்திரப்பதிவுத் துறையினர் தொல்லைப் பிள்ளைகளாக பார்க்கிறார்கள்.

இன்றுள்ள நிலையில் உரிமம் பெற்ற பத்திரப்பதிவு எழுத்தர் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலர்கள் பலருக்கும் பல சட்டங்கள் குறித்து தெரியாது. அவர்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் இந்திய முத்திரைச் சட்டம், பதிவுச் சட்டம், சொத்துரிமை மாற்றுச்சட்டம், தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் சட்டம் மற்றும் தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டம் ஆகியவற்றின் பயன்பாடு பிரிவுகள் (application sections) மட்டும் தான்.

ஆனால், இன்று நிலம் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் பல சட்டங்கள் வந்துவிட்டன. அந்த சட்டங்கள் பற்றிய அறிவும் தெளிவும் வழக்குரைஞர்களுக்கு மட்டுமே உண்டு.

மேலும் 1982 இல் இன்றுள்ள எண்ணிக்கையில் வழக்குரைஞர்கள் தமிழ்நாட்டில் இல்லை.
இன்று வழக்குரைஞர்கள் எண்ணிக்கை கூடிவிட்ட நிலையில் வழக்குரைஞர்கள் இதுபோன்ற சட்டம்சார் (Para legal services) சேவைகளை எடுத்து செய்ய வேண்டியவர்களாய் உள்ளோம்.

இன்றுள்ள நிலையில் பல மேலை நாடுகளில் இந்த சட்டம்சார்/Para legal பணிகள் அனைத்தும் வழக்குரைஞர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் Real estate குறித்து பட்டப்படிப்பு உள்ளது. சில நாடுகளில் Land Documentation குறித்து தனியான படிப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் படிப்பு படித்துவிட்டு இத்தனை வழக்குரைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆவண எழுத்தர் உரிமையும் பெறாமல் சட்டமும் படிக்காமல் ஒரு பெருங்கூட்டம் போலியாக தங்களை ஆவண எழுத்தர்கள் என்று கூறிக்கொண்டு எந்தவித அச்சமும் இல்லாமல் சமூக விரோதிகளின் ஆதரவோடு அங்கே கல்லாக்கட்டிக்கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்.

சட்டப்படி அந்த பணிகளைச் செய்ய வேண்டிய வழக்குரைஞர்களாகிய நாம் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

ஏன் இந்தநிலை என்றால் சட்டம்சார் (para legal services) பணியான பத்திரப்பதிவு (documentation) வழக்குரைஞர்கள் ஆகிய நாம் நமக்குள் ஒன்றுபட்டு சங்கம் அமைத்து நமது கோரிக்கைகளை அரசின் முன் வைக்காது தான்.

சரி நம் கோரிக்கை தான் என்ன?.

தமிழ்நாட்டில் வழக்குரைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

ஆகவே, 1996 உக்குபின் பத்திர எழுத்தர் உரிமம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் புதிதாக ஆவண எழுத்தர் உரிமங்களை யாருக்கும் வழங்கக் கூடாது என்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் பத்திர எழுத்தர் என்பது முழுமையாக ஒழிக்கப்பட்டு பத்திரம் எழுதுவதும் பதிவு செய்வதும் வழக்குரைஞர்கள் பணி என்று முழுமையாக ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.

ஆகவே,
இந்திய பத்திரப்பதிவு சட்டத்தில் தமிழ்நாடு அரசு 1982 இல் கொண்டு வந்த பிரிவு 89B ஐ இரத்து செய்ய வேண்டும் என்றும்

சார் பதிவாளர் அலுவலகங்களில் வழக்குரைஞர்கள் உரிமைகளை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்வது என்றும்

பத்திரப்பதிவின் போது பத்திர எழுத்தர் நிதியாக ரூ.10/- பதிவுக் கட்டணத்துடன் செலுத்தப்படுகிறது.
அதுபோல் வழக்குரைஞர்கள் பதியும் பத்திரங்களுக்கு பத்திரப்பதிவு கட்டணத்துடன்
தமிழ்நாடு வழக்குரைஞர் நலநிதியச் சட்டம் 1987 இன்படி நலநிதியாக ரூ.100/-ஐ வசூலித்து வரும் நிதியை தமிழ்நாடு வழக்குரைஞர் நலநிதியில் சேர்க்க வேண்டும் என்றும்

தற்போது வந்துள்ள பல புதிய சட்டங்களை கருத்தில் கொண்டு வருங்காலத்தில் சட்டப்படிப்பு படித்தவர்களை மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் சார் பதிவாளாக தேர்வு செய்து பணி அமர்த்த வேண்டும் என்றும்

இவற்றையும் இன்னும் சிலவற்றையும்
முதன்மைக் கோரிக்கைளாக அரசு மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முன் வைப்பது என்றும் தான் இந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பத்திரப்பதிவு வழக்கறிஞர்கள் சங்கம் துவங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுக்கு என்று tnregnet.com என்ற இணையத்தளம் உள்ளதுபோல் இந்தியா முழுவதும் indiaregnet.com என்ற இணையதளம் உள்ளது. இந்த இணைய தளத்தில் தற்போது பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்கள் இணைந்து உள்ளன. தமிழ்நாடு மாநிலமும் இணைய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
அவ்வாறு கட்டாயமாக இணைத்தால் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் வழக்குரைஞர்கள் மட்டுமே பத்திரப்பதிவு செய்யும் நிலை ஏற்படும்.

மேலும் இந்திய பதிவுச் சட்டம் மத்திய/ஒன்றிய அரசின் சட்டம். அதில் தமிழ்நாடு அரசின் திருத்தம் பிரிவு 89B இன் நிலை என்ன என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று உரிமம் பெற்று பத்திர எழுத்தர்களாக செயல்படும் எந்த ஒரு பத்திர எழுத்தருக்கும் வழக்குரைஞர்கள் ஆகிய நாம் எதிரானவர்கள் அல்ல என்பதை நாம் தெளிவு படுத்துகிறோம்.

பத்திரப்பதிவு எழுத்தர்கள் என்று கூறிக்கொண்டு பத்திர எழுத்தர் அலுவலகம் நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் போலிகளை ஒழிக்க வேண்டும் என்றும்

புதிதாக ஆவண எழுத்தர் உரிமம் வழங்கக் கூடாது என்றும் அவ்வாறு புதிதாக பத்திர எழுத்தர் உரிமம் வழங்கினால் சட்டம் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பல்லாயிரம் வழக்குரைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் வழக்குரைஞர்கள் ஆகிய நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

இவண்.
ம. முருகேசன்,
வழக்குரைஞர்,
கோயமுத்தூர்.
செல். 9578758182.

indiaregnet.com

Want your business to be the top-listed Business in Erode?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

RANGAMPALAYAM
Erode